Thursday, June 18, 2009

பிரபாகரன் வீரமரணம்: புலிகளின் புலனாய்வு பிரிவு ஒப்புதல்



கொழும்பு,ஜூன்18புலிகள் தலைவர் பிரபாகரன், ராணுவத்துடன் போரிட்ட போது வீரமரணம் அடைந்து விட்டதாக புலிகள் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் கூறியுள்ளார். இலங்கை இறுதிப்போரில் பிரபாகன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. உடலை கைபற்றி எரித்து விட்டதாகவும் கூறினர். ஆனால் புலிகள் தரப்பில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினர். இதற்கிடையே புலிகள் தரப்பில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் நலமாக இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் வெளியுறவுப்பிரிவு தலைவர் செல்வராசா பத்மநாதன் மே 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று தெரிவித்தார். புலிகள் அமைப்பிலிருந்து இரு வேறுபட்ட தகவல்கள் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. புலிகள் அமைப்பில் ஒற்றுமை இல்லை என்றும் செய்திகள் வெளியாயின.இந்நிலையில், புலிகளின் புலனாய்வு பிரிவு மற்றும் வெளியகப்பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எமது இயக்கத்தின் தலைவர் மற்றும் ராணுவ தளபதி தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார். இதை புலிகளின் புலனாய்வுத் துறை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இறுதிப்போரின் போது பிரபாகரனை பாதுகாப்பான இடம் நோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியில் அவருடன் எமது புலனாய்வு போராளிகள் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். இவர்கள் இப்போது அளித்த தகவல்கள் மற்றும் இலங்கை ராணுவத்துடன் தொடர்புடைய எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் கூறும் தகவல்கள் ஆகியவை தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.கடந்த மே மாதத்தில் 15ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரையிலான காலப்பகுதியில் வன்னி, முள்ளிவாய்க்கால் போர் பகுதியில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வந்த படி இருந்தன. சீரான தகவல்கள் கிடைக்கவில்லை. போர் முனையில் இருந்து வெளியேறிய புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று சேரமுடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் அனுப்பிய தகவல்கள் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. ஆனால் அப்போது கிடைத்த தகவல்களை சீர்படுத்தியதன் அடிப்படையில் எங்கள் அன்புக்குரிய தலைவர் நலமாக இருப்பதாக கருதி மே 22ம் தேதி அப்படி ஒரு செய்தி வெளியிட தீர்மானித்தோம். இந்த நிலையில், பிரபாகரனின் பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக இறுதி வரை அவருடன் இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் சர்வதேச உறவுத் துறை இயக்குனர் செல்வராசா பத்மநாதன் ஆரம்பத்தில் இரு வேறு முரண்பட்ட செய்திகளை தரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் என்பதை எங்களால் உணர முடிகிறது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்தியை மே 22ம் தேதி வெளியிட்டதற்காக வருத்தப்படுகின்றோம். அந்த செய்தியை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது. பிரபாகரனின் வீரமரணம் தொடர்பாக பல தரப்பினர் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் கொல்லப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் பல மாறுபட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எந்த செய்தியையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வு துறையினர் ஆகிய எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் சரண் அடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இலங்கை ராணுவத்திடம் போரிட்டே வீரகாவியம் ஆனார் என்பதை நாங்கள் மிக திடமாக உறுதிப்படுத்துகின்றோம். இப்போது தோன்றியுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டு சென்றுள்ள எமது விடுதலைப்போராட்டத்தை அதே உறுதிப்பாட்டுடன் அதே கட்டுக்கோப்புடன் அதே ஒற்றுமையுடன் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லும் எமது இறுதி லட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக இப்போது உருவாக்கப்பட உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன்பு உள்ள கடமையாகும். தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் , தளபதிகளுக்கும் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு புலிகளின் புலனாய்வுத் துறை அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.

Monday, June 15, 2009

தமிழர்களை காட்டி பிச்சையெடுக்கும் ராஜபக்சே

இலங்கை போர் முடிந்த பிறகு, ராஜபக்சே ரத்தம் குடித்ததை தவிர மிச்சம் இருக்கும் தமிழர்கள் நிலை எதிர்பார்த்ததை போலவே கவலையளிப்பதாக மாறியிருக்கிறது. முகாம்களில் வதைபடும் லட்சக்கணக்கான தமிழர்களை காட்டி சர்வதேச நாடுகளில் நிதி உதவியை பெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இதனால்தான் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், தமிழர்களுக்கான நிவாரண உதவிகளுக்கு உலக நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு முன்பே, தமிழர்களை கொன்று குவித்ததற்கு பரிசாக இந்திய அரசு ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்தது. பின்னர் இதை ரூ1000ம் கோடியாக உயர்த்தியது.
இப்போது ராஜபக்சே ஊர் ஊராக சென்று தமிழர்கள் மானத்தை விற்று பிச்சையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். மியான்மர் சென்றுள்ள ராஜபக்சே நிருபர்களிடம் கூறுகையில், புலிகளுக்கு எதிரான போரில் ஒரு லட்சம் தமிழர்கள் இறந்திருக்கின்றனர் என்று நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார். இந்த நீலிக்கண்ணீரை நம்பி பரிதாபப்பட்ட மியார்மர் அரசு இலங்கைக்கு 50 ஆயிரம் டாலர் அதாவது ரூ.25 லட்சம் உதவித்தொகையை அள்ளிக்கொடுத்திருக்கிறது.
இப்படி ஊர் ஊராக பிச்சையெடுக்கும் ராஜபக்சே தொடர்ந்து தமிழர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றவும் திட்டமிட்டுள்ளார் என்பது உறுதியாகி இருக்கிறது.

Monday, June 8, 2009

மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்


தென்மேற்கு பருவக்காற்று வீசும் தேனி பக்கம் சமீபத்தில் சென்றிருந்தேன். சென்னையில் இருந்து திருச்சி போய், திருச்சியில் இருந்து திண்டுக்கல் சென்று, திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்ல காலை 9.30 ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிரே பிளாட்பாரத்தில் பழக்கடையுடன் இணைந்த ஜூஸ் கடையில் ஆரஞ்சு ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தேன். என் அருகில் கிராமத்து தம்பதியர் நின்றிருந்தனர். அவர்களின் தோற்றத்தை பார்க்கும் போது 45 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களும் ஜூஸ் சாப்பிட்டனர். சில நிமிடங்களில் அவர்கள் அருகில் இன்னொரு ஆண் வந்து நின்றார். அவரை சில நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. திடீரென கவனித்த அந்த தம்பதியினர் என்னய்யா இந்த பக்கம் என்று விசாரித்தனர். சும்மா ஒரு ஜோலியா வந்தேன் என்றார். இவர்கள் ஜூஸ் குடிப்பதை பார்த்து அவருக்குள் ஒரு ஏக்கம் இருந்திருக்க வேண்டும். தம்பதியரில் ஆண், தன் மனைவியை கண்ணால் ஜாடை காட்டி என்ன இவருக்கு ஜூஸ் வாங்கி கொடுக்கலாமா என்று அனுமதி கேட்டார். அதற்குள் அந்த மனிதர் இதை புரிந்து கொண்டார். ஜூஸ் கடைக்காரரிடம் சத்தமாக எனக்கு ஒரு ஜூஸ் போடுப்பா என்றார். அந்த சத்தத்தில் நீங்க வாங்கிக் கொடுக்காட்டி என்ன நான் குடிக்கமாட்டேனா என்ற அர்த்தங்கள் பொதிந்திருந்தது. இது போன்ற மெல்லிய உணர்வுகள் தென் மாவட்டங்கள் பக்கம் அதிகமாக இருக்கிறது. மெல்லிய உணர்வுகள், ஏக்கங்கள் புறக்கணிக்கும் போது ஈகோவாக, கோபமாக வெளிப்படுகிறது என்று கருதுகிறேன். எனவே மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.

சென்னை கொடூர கொலை: சட்டம் ஓழுங்கு சீர்குலைவு




சென்னையில் சுரேஷ்குமார் என்ற நகை வியபாரி கொடூரமாக வெட்டி கொலை செய்திருப்பது தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயின் கோவில் பூசாரியை கொன்று கோவிலை கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
சுரேஷ்குமார் கொலைக்கு 2 நாட்களுக் முன்புதான் தமிழகத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் என்று கூறி சென்னை முழுவதும் வாகனசோதனை நடத்தினோம் என்றனர். ஆனால் சுரேஷ்குமாரை கொன்றவர்கள் உடலை வெட்டி 3 பகுதியாக பிரித்து சினிமா தியேட்டர் அருகே உள்ள தெருக்களில் சுதந்திரமாக வீசி சென்று இருக்கின்றனர். தீவிரவாதிகள் நடமாட்டத்துக்காக வாகனசோதனை நடத்திய போலீசாரிடம் இந்த மர்ம நபர்கள் மாட்டவில்லையா? இரவு ரோந்து போலீசாரின் நோக்கம் அப்பாவிகளை பிடித்து பணம் பறிப்பதுதான் என்பதும் தெளிவாகிறது. ஒழுங்காக வாகனசோதனை செய்தால் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாமே என்பது நம் எண்ணம்.
நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது கொலை கொள்ளைகள் சகஜமாகி வருகிறது. போலீஸ் கைகள் சுதந்திரமாக இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தேர்தல் காலத்தில் ரவுடிகளின் கைகளில் நிறைய காசு புழங்கியது. அதன் தெனாவெட்டில் இப்போது நகரில் தங்கள் ராஜ்யத்தை தொடங்கியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் ரவுடிகளின் ஆதரவை கோரும் கட்சிகள் அவர்களை கண்டும் காணாமல் விட்டு விடுவது சட்டம் ஒழுங்குக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தும்.
அடுத்த கொலை நடக்கும் முன்பாவது போலீசார் விழிப்படைய வேண்டும். செய்வார்களா?

Saturday, June 6, 2009

பயணம் 2 கரிசல் காட்டு சூரியகாந்தி






என் பயணத்தில் என் அம்மத்தாளுடன் என் ஊரில் இருந்து கோனூர் என்ற சிற்றூருக்கு பயணம் சென்றதை மறக்கவே முடியாது. வக்கம்பட்டியில் இருந்து காலையில் 10 மணிக்கு கிளம்புவோம். போகும் போது, அரிசி எல்லாம் எடுத்துக்கொள்வோம். என் அம்மத்தாவின் சகோதரி வீட்டில் கொடுப்பதற்காக எடுத்து செல்வோம். வக்கம்பட்டியில் ஓடும் குடகனாற்றை கடந்து செல்வோம். எப்போதும் முழங்கால் அளவு தண்ணீர் ஓடும். தண்ணீர் ஜில்லிட இறங்கி தாண்டி கும்மம்பட்டி வழியே நடந்து ஒற்றையடிப்பாதையில் செல்வோம். வெயில் அதிகம் இருந்தால் கொஞ்ச நேரம் மரநிழலில் அமர்ந்து விட்டு செல்வோம். அனுமந்தராயன் கோட்டை வழியே சென்று கோனூர் பிரிவுக்கு போகும் போது கரிசல் காட்டு மண்ணை பார்க்க முடியும். ஏன் மண் இவ்வளவு கருப்பாக இருக்கிறது என்று எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கும். வக்கம்பட்டியில் எல்லாம் செம்மண் ஆகத்தான் இருக்கும். இங்கே மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று புரியவில்லை. அந்த கரிசல் நிலத்தில் அழகாக சூரியகாந்தி பூக்கள் சிரிக்கும். பெரிய பெரிய இலைகளுடன் செடிகள் இருக்கும். ரொம்ப நாளாக அது என்ன செடி என்று தெரியவில்லை. பின்னர்தான் அது புகையிலை இலை என்று தெரிந்தது. கோனூருக்குள் நுழைவதற்கு முன் ஒரு கால்வாய் ஓடும். ரோட்டில் இருந்து மிக சரிவாக இருக்கும். பயந்து பயந்து நடந்து செல்வேன். அம்மத்தா கொண்டு வரும் துணி பைகளை நான்தான் சுமந்து செல்வேன். கோனூரில் அம்மத்தாவின் சகோதரி வீட்டுக்கு போனதும், அந்த சகோதரியின் மருமகன் எனக்கு மாமா முறை வேண்டும். அவரது மளிகைக்கடையில் தேன் மிட்டாய் எடுத்து சாப்பிடுவேன். மாமா பையன்கள். மாமா பெண்ணுடன் விளையாடுவேன். இரவு திருவிழாவில் கொட்ட கொட்ட விழித்திருந்து நாடகம் பார்ப்போம். சில நாட்களில் திரைப்படமும் காட்டுவார்கள். ஆண்டு தோறும் திருவிழாவின் போது இந்த பயணம் தொடர்ந்தது. விவரம் தெரிந்து பெரிய ஆளான பிறகும் இந்த ஊருக்கு பயணம் செய்தேன். பெண் கேட்டு பயணப்பட்டேன். அந்த பயணம் தோல்வியில் முடிந்தது.இன்னும் இந்த கரிசல் மனதில் சூரியகாந்தியாய் அமர்ந்திருக்கிறது கோனூர் பயணம். அடுத்ததாக என் பயணத்தில் பள்ளிப் பயணம்....

Friday, June 5, 2009

பயணங்கள்




பயணங்கள் எப்போதும் இனிமையானவை. எனக்கு மட்டுமல்ல.பலருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். என் தாய் என்னை கர்ப்பத்தில் சுமந்தது ஞாபகம் இல்லை. ஆனால் என் பாட்டி என்னை அழைத்துக்கொண்டு அடிக்கடி போடிக்கும், வக்கம்பட்டி என்ற சிற்றூருக்கும் பஸ்சில் அழைத்து செல்வாள். போடியில் இருந்து பஸ் ஏறுவதற்கு முன்பு பை நிறைய பூந்தியும், அதிரசமும் அள்ளி எடுத்துக்கொள்வாள். இவையெல்லாம் பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுட சுட தயாராகும். பஸ்சில் வத்தலக்குண்டு தாண்டி வரும்போது சிறிய மேட்டு வளைவில் பஸ் ஏறுகையில் அந்த பகுதியை பார்ப்பதில் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு. வக்கம்பட்டியில் எங்களுக்காவே ரூட் பஸ் நிற்கும். போடியில் என் மாமா ஒரு நாளிதழின் நிருபராக இருப்பதால் டிரைவரிடம் முன் கூட்டியே சொல்லி விடுவதால் இந்த சலுகை. என் அம்மத்தாவுக்கு என் அம்மா ஒரே பெண் பிள்ளை என்பதால் இவ்வளவு பாசம். எனவே என்னை அம்மத்தாவே கூட்டிக்கொண்டு போய் போடியில் வளர்த்தாள்.
என் அம்மாவீட்டுக்கு வந்ததோடு நிற்கமாட்டாள் என் அம்மத்தாள் அடுத்ததாக சில கி.மீ. தூரத்தில் இருக்கும் அவளின் சகோதரி வீட்டுக்கு கிளம்புவாள். அது ஆறு, கால்வாய்களை கடந்து செல்லும் பயணம் மிக இனிமையாக இருக்கும். அந்த பயணத்தை நாளை சொல்கிறேன்.