Saturday, October 12, 2013

என்னுடைய 2 புத்தகங்கள்

என்னுடைய முதல் புத்தகத்தை ஒரு விபத்து போல எழுத நேர்ந்தது. தினகரன் நாளிதழில் நிருபராக பணியாற்றிய போது தலைமை நிருபர் திருமாவேலன் அவர்கள் புத்தகங்கள் எழுதுவதற்கு தூண்டினார். தினகரன் பணியை விட்டு அவர் தொடங்கிய பதிப்பகத்துக்காக 2007-ம் ஆண்டு நோபல் இலக்கிய பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்சிங் என்ற பெண் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத த்தொடங்கினேன். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன். நான் எழுதுவதற்கு மிகவும் தாமதப்படுத்திய நிலையில் புத்தகத்தை உடனே வெளியிடமுடியாமல் போனது. பின்னர், வேறு ஒரு நண்பர் உதவியுடன் சந்தியா பதிப்பகத்தில் என் முதல் புத்தகம் வெளியானது. புத்தகம் குறித்து தினமலர், தினமணி, தினகரன் ஆகிய இதழ்களில் வெளியான மதிப்புரைகளை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.


என்னுடைய இரண்டாவது புத்தகம் மணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. உலகில் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன். சாக்ரடீஸ் உரையை மொழி பெயர்ப்பதற்கு மட்டும் எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது. 

Friday, April 26, 2013

ஏடிஎம், காவலாளிகள்....


நம்மிடம் பணம் சம்பாதிக்கும் திறன் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் தெருவுக்கு, தெரு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அதிக அளவு ஏடிஎம்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்கள் அதிக அளவு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே இருக்கின்றன.

சம்பளம் வாங்கி குடித்து விட்டு வீட்டுக்குப்போ என்று அரசாங்கமே சொல்வது போல இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு வங்கியின் ஏடிஎம் ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணத்துக்கு சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மை எடுத்துக்கொண்டால் தியாகராயநகரில் ஒரு மாதிரி இருக்கிறது. அதற்கு பக்கத்தில் சைதாப்பேட்டை மார்க்கெட் பகுதியில் வேறு மாதிரி வடிவத்தில் இருக்கிறது. அட்டையை உள்ளே செலுத்தும் வழியில் இருந்து, பணம் எடுப்பதற்கான உத்தரவுகள் வரை அனைத்துமே ஒவ்வொரு ஏடிஎம்முக்கும் இன்னொரு ஏடிஎம்முக்கும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு ஏடிஎம்மில் தொடுதிரையில் விருப்பத்தை தேர்வு செய்வது போல் இருக்கும். இன்னொன்றில், பட்டனை அழுத்த வேண்டியிருக்கும். இது போன்ற வித்தியாசங்கள் புதிய ஆட்களை, பெண்களை, முதியவர்களை குழப்புகின்றன. ஏன் ஒரே மாதிரி ஏடிஎம்களை வைக்க கூடாது? ஏடிஎம்-க்குள் செல்லும் போது முழுக்க, முழுக்க நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருந்தோமானால், கார்டை தொலைத்து விடுவோம்.

நான் இப்படி கார்ப்பரேஷன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஏதோ சிந்தனையில் திரும்ப கார்டை எடுக்க மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை பணம் எடுக்கும் தேவை எழுந்த போதுதான், கார்டை மிஷினிலேயே விட்டது ஞாபகம் வந்த்து. பின்னர் கடிதம் எழுதிக் கொடுத்து புதிய கார்டு வாங்க நேர்ந்த்து. பலருக்கு இது போல பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். சென்னை உட்பட பல ஊர்களில் அதிகமான ஏடிஎம்கள் இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குத்தான். ஆனால் பல இடங்களில் பழுதாகி இருப்பதும் அந்த ஏடிஎம்தான். சைதாப்பேட்டையில் ரெட்டிக்குப்பம் சாலையில் ரயில் நிலையத்துக்கு செல்லும் முன்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மாத த்தில் 5 நாட்கள் இயங்கினால் அபூர்வம். எப்பொழுதுமே அவுட் ஆப் ஆர்டர் என்ற காவலாளியின் கைவண்ணத்தில் எழுதிய ஒரு அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருக்கும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அவசரத்துக்கு 100 ரூபாய் எடுக்கவே முடியாது. சில நேரங்களில் 500 ரூபாய் நோட்டு கூட வராது. 1000 ரூபாய் மட்டுமே வரும். அது போல அவர்கள் போட்டு வைத்திருக்கின்றனர். இது ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு முரணானதா? என்று தெரியவில்லை.

எச்.டி.எப்.சி., ஏடிஎம் அறைகளில் இரண்டு அல்லது மூன்று ஏடிஎம்கள் ஒரே இடத்தில் அமைத்திருக்கின்றனர். 100 ரூபாய் எடுத்தால் கூட புது தாள் ஆக வந்து விழும். ஆச்சர்யமாக இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு 10 ரூபாய் தாளை புதுத்தாள் ஆக பார்த்தால் அதை பத்திரமாக வைக்க தோன்றும். இப்போது 100 ரூபாய் தாளை புதிதாக பார்த்தால் கூட அதை பத்திரமாக வைக்க தோனுவதில்லை. ஒரு வேளை தோன்றினாலும். செலவுக்கான முன்தேவைகள் கண்முன் வந்து நிற்கின்றன.

ஏடிஎம்-க்கு அறைகளை வாடகைக்கு விடுவதற்குத்தான் இப்போதெல்லாம் சென்னை வாடகை வீட்டுக்கார ர்கள் விருப்பப்படுகின்றனர். கீழ் தளத்தில் இருக்கும் வீடுகள் எல்லாம் ஏடிஎம்களாக முகம் மாறிப்போனது இப்படித்தான். வங்கி தரும் ஆயிரகணக்கான அட்வான்ஸ் தொகை. மாத வாடகை ஆகியவை எந்த வீட்டு உரிமையாளருக்குத்தான் கசக்கும்!

ஏடிஎம்-ஐ காவல் காக்கும் காவலாளிகளும் வித்தியாசமான நபர்களாக இருக்கின்றனர். சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அதன் காவலாளி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். பெரும்பாலான நேரங்களில் இந்த ஏடிஎம் இயங்குவதில்லை என்று மேலே கூறியிருந்தேன். அப்படியிருக்கும் போதிலும் ஏடிஎம்மை தூய்மை படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். மழை நேரங்களில் செருப்பை கழட்டி விட்டு செல்லும் படி கூறுவார். இப்படி சுத்தமான மனிதராக இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

ஏடிஎம் காவலாளிகள் பெரும்பாலும் முதியவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள்தான் கிடைப்பார்கள் என்பதால் வங்கிகள் இது போன்று நியமித்திருக்கலாம் என்று தெரிகிறது.

வானகரத்தில் உள்ள தொலைகாட்சி ஊடகம் ஒன்றில் பணியாற்றியபோது வளசரவாக்கம் வழியாக செல்வது வழக்கம். அப்போது அங்கு உள்ள எச்டிஎப்சி ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு வரும்போது அங்கிருந்த காவலாளி பரிதாபமாக கையேந்தினார். அதர்ச்சியாக இருந்த்து. ஏடிஎம்ஐ காவல் காக்கும் ஒருவர் பணம் கேட்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு முறை மட்டும் இல்லை. இன்னொரு முறை அதே ஏடிஎம்-ல் பணம் எடுத்தபோதும் இதே போல பணம் கேட்டார். என்னிடம் மட்டும் இல்லை அங்கு வரும் எல்லோரிடமும் கேட்டார். சிலர் அவரை திட்டக்கூட செய்தனர்.

இதே போல நகரின் வேறு ஒரு இடத்திலும் இது போல ஒரு காவலாளி என்னிடம் பணம் கேட்டார். பெரும்பாலான ஏடிஎம்களில் காவலாளிகள் பணம் கேட்பதில்லை. பணம் எடுத்து விட்டு வெளியே வரும் போது எந்தவித பாவனையும் காட்டாமல்தான் காவலாளிகள் இருக்கின்றனர். சிலர் கதவை திறப்பதற்கு உதவுகின்றனர். கார்டை செலுத்தி கதவை திறப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்கின்றனர்.

ஏடிஎம் காவலாளிகளிடம் எப்போதுமே நான் பேசியதில்லை. தற்போது நான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஏடிஎம் இருக்கிறது. அவ்வப்போது அதில்தான் பணம் எடுக்கிறேன். அந்த ஏடிஎம் காவலாளியுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

ஏடிஎம் மிஷினுக்கு பணம் எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை 15-ம் தேதி வரை தான் அதிகம் இருக்கும் என்றார். சம்பளம் காலியாகி விடுவதால் அதன்பின்னர் பெரும்பாலானோர் வருவதில்லை என்றார்.

அந்த ஏடிஎம் காவலாளி தம்மை பற்றி நிறைய தகவல்களை என்னிடம்பகிர்ந்து கொண்டார். திருச்செந்தூரை சேர்ந்த அவர், ஒரு நாள் பள்ளி இறுதி தேர்வு விடுமுறைக்காக சென்னைக்கு அண்ணன் வீட்டு வந்தாராம். அண்ணன் பிரசாத் ஸ்டுடியோவில் வேலைபார்த்து வந்தார். அவர் தமது தம்பியையும் அங்கேயே வேலைக்கு சேர்த்து விட்டாராம். டைப்பிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்தவர், கதைகளை டைப் செய்வது, ஷூட்டிங் செட்யூலை டைப் செய்வது, ஸ்டுடியோவில் எத்தனை தளங்கள் இருக்கின்றனவோ, அந்த ந்த தளங்களில் தினந்தோறும் நடைபெறும் ஷூட்டிங் விவரங்களை டைப் செய்து அதனை ஆவணமாக்குவது போன்ற பணிகளை செய்து வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் ஷீட்டிங்களை நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் சொந்த தொழில் செய்து விட்டு, பிரச்னைகள் ஏற்பட்டு, இப்போது ஏடிஎம் காவலாளியாக இருக்கிறார். ஏடிஎம்-க்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தால் தேவையின்றி எழுந்திருக்க மாட்டார். பெரும்பாலான நேரங்களில் நாளிதழ் படித்துக்கொண்டே இருப்பார்.

இப்போதெல்லாம் ஏடிஎம் இயந்திரங்களை உடைக்க முயற்சி என்று பரவலாக செய்திகள் வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை புழங்கும் ஏடிஎம்-க்கு திடகாத்திரமான ஏடிஎம் காவலாளிகளை நியமிக்க வேண்டும்என்று காவலாளிகள் சங்கத்தினரும் கூறி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் வங்கி நிறுவனங்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வங்கிகள் இப்போது வாராக்கடன் சதவீதம் என்று கணக்கு எழுதி விடுகின்றனர். அதைப்பற்றி கவலைப்படவில்லை. இதனால்தான் கடன் வாங்கிய பல அரசியல்வாதிகள் தப்பித்து வருகின்றனர். அதைப்போல ஏடிஎம் கொள்ளைகளும் சகஜமான ஒன்று என்றும், கொள்ளைகள் நடந்தால் நடக்கட்டும் என்று வங்கிகள் நினைத்து விட்டன போல்தான் தெரிகிறது. வாரா கடன் போல, ஏடிஎம் கொள்ளை கணக்கு என்று எழுதுவார்கள் போல் தெரிகிறது.

Saturday, April 13, 2013

ஏ.டி.எம். கார்டு, இயந்திரம், காவலாளி....


பல தலைமுறைகள் அறிந்திராத, தற்போதைய தலைமுறைக்கு மட்டுமே அறிமுகமான ஒன்று ஏடிஎம். என் தந்தை திண்டுக்கல் நகரில் வேளாண்விளை பொருட்களை விற்கும் கமிஷன் மண்டி வைத்திருந்தார். தினமும் ஆயிரகணக்கான ரூபாய் பணத்தை புழங்குவார். வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருந்தார். ஏடிஎம் வசதி இருந்தும் கூட அதற்கான ஏடிஎம் கார்டை அவர் பெற்றுக்கொண்டதில்லை, உபயோகித்ததும் இல்லை. ஒருவேளை இப்போது உயிருடன் இருந்திருந்தால் உபயோகித்திருப்பாரா? என தெரியவில்லை. என் அம்மாவும் இதுவரை ஏடிஎம் கார்டை உபயோகித்த தில்லை. என் சகோதரன் அல்லது நான் அவருடைய பணத்தேவைகளை பூர்த்தி செய்து விடுவதால் அதற்கான அவசியம் இல்லை எனலாம்.

ஏடிஎம் உள்ளே கூட சென்று பார்த்ததாக எனக்கு தெரியவில்லை. அதற்கான ஆசை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இந்த கட்டுரை எழுதும் தருணத்தில் என் அம்மாவிடம் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அதே நேரத்தில் என் குழந்தைகள் ஏடிஎம்-மின் குளிர் அறைக்குள் செல்வதற்கு மிகவும் பிரியப்படுகிறார்கள். நான் முதன் முதலில் ஏடிஎம் என்ற புழக்கத்தை தெரிந்து கொண்டது ஒரு நண்பர் மூலம்தான்.

1998-2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் என்று நினைக்கிறேன். சென்னையில் சில பத்திரிகைகளுக்கு பகுதிநேரமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது ஆறாம் திணை இணையதளத்தில் பணியாற்றிய நண்பர் சுந்தரமூர்த்தி. அவருக்கு அப்போது வங்கியில்தான் சம்பளம் கிரடிட் ஆகும். அவரிடம் ஒரு முறை பணம் கேட்டேன். ஏடிஎம்-க்கு அழைத்து சென்று எடுத்துக்கொடுத்தார்.

அதன் பிறகு நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவந்த தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பணியாற்றியபோது முதல் சில ஆண்டுகளில் ஒரு கவரில் வைத்து பணமாக சம்பளம் கொடுத்தனர். 2002-ம் ஆண்டு வாக்கில்தான வங்கி கணக்கில் சம்பளம் கிரடிட் ஆயிற்று. எச்டிஎப்சி வங்கியில் இருந்து பளபளக்கும் அட்டை ஒன்றை கொடுத்தனர். ஆரம்பத்தில் அது டெபிட் கார்டா அல்லது கிரெடிட் கார்டா என்ற குழப்பம் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது. நமது கணக்கில் பணம் இருந்தால்தான் டெபிட் கார்டை உபயோகிக்க முடியும் என்பதும், கிரெடிட் கார்டு என்பது வங்கி அளித்த வரம்புக்குள் கடனாக அதனை உபயோகித்து திருப்பி செலுத்த வேண்டும் என்பதும் ஒரு சில மாதங்கள் கழித்துத்தான புரிந்தது. ஆரம்பத்தில் இருந்தே 100 ரூபாய்க்கு குறைந்து ஏடிஎம் அட்டை மூலம் எடுக்க முடியாது என்பது விதியாக இருந்து வருகிறது. ஆரம்ப கால கட்டத்தில் இந்த விதிமுறை அதர்ச்சியாக இருந்தது. நூறு ரூபாய்க்கு கீழே குறைந்து விட்டால் அந்த பணத்தை எடுக்க முடியாமல், மாதக்கடைசியில் தவிப்பது இன்றும் சில நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது.

தமிழன் எக்ஸ்பிரசில் இருந்து மாறி தினகரன் நாளிதழில் சேர்ந்த போது, வங்கி அதிகாரிகள் அலுவலகத்துக்கே வந்து கணக்கு படிவத்தில் கையெழுத்து வாங்கி போனார்கள். முதலில் சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு தொடங்கினர். மாத்த்தின் முதல்வராத்தில் சம்பளம் போட்டு விட்டார்களா என்பதை அறிய ஏடிஎம் கார்டை திரும்ப, திரும்ப போட்டு பார்ப்பது இயல்பான ஒன்றாகிப் போனது. ஒரு சில மாதங்களிலேயே என்ன ஆனதோ தெரியவில்லை, தினகரன் நிர்வாகத்தின் வங்கி கணக்கு கார்ப்பரேஷன் வங்கிக்கு மாற்றப்பட்டது. உடனே அனைவரும் கார்ப்பரேஷன் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டோம். அங்கு புதிதாக ஏடிஎம் கார்டு கொடுத்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு ஏடிஎம் கார்டுகளை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தேன். வங்கி கணக்கில் ஒன்றும் இல்லை. ஆனால் ஏடிஎம் கார்டு மட்டும் இரண்டு இருந்தது. சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருக்கும்போது ஒரு முறை பெட்ரோல் பங்கில், அந்த வங்கியின் ஏடிஎம் கார்டை உபயோகித்து பெட்ரோல் போட்டேன். டெபிட் கார்டு என்ற போதிலும் கணக்கில் இருந்த பணத்தை விட அதிகமாக டெபிட் ஆகிவிட்டது. பின்னர் வங்கியில் இருந்து என்னை அழைத்து தவறுதலாக உங்களுக்கு கூடுதலாக பணம் வந்து விட்டது. அதை திரும்பி செலுத்துங்கள் என்றனர்.

இப்படியாக ஏடிஎம்-க்கும், எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டிருந்தது. எழும்பூர் தினமலர் நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றியபோது, மீண்டும் பழைய முறையில் கவரில் சம்பளம் கொடுத்தனர்.

எனினும் பகுதிநேரமாக மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டிருந்த போது, அதற்காக சிலர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிடுவார்கள். அதனை எடுப்பதற்கு எனக்கு சிட்டியூனியன் வங்கி கார்டு உபயோகமாக இருந்தது. இடையில் ஒன்றை சொல்லியாக வேண்டும்.

வங்கி கடனுக்காக இடையில் அலைந்து கொண்டிருந்தேன். ஆந்திரா வங்கியில் கணக்கு ஆரம்பித்தால் வங்கி கடன் பெற்று விடலாம் என்று ஒரு நண்பர் தகவல் சொன்னார். அதை நம்பி ராயப்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியில் கணக்கு தொடங்கினேன். அதில் கொஞ்சகாலம் பணத்தை போட்டு எடுத்து வந்தேன். அந்த ஏடிஎம் கார்டையும் வாங்கி பயன்படுத்தினேன். ஒரே நேரத்தில் 3 ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு திரிந்தேன்.

ஆந்திரா வங்கியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது பிரச்னைக்கு உரிய ஒன்று. நான் கணக்கு வைத்திருந்த நாட்களில் சென்னையில் அந்த வங்கியின் ஏடிஎம் படுத்தி எடுத்து விடும். பெரும்பாலும் பழுதில் இருக்கும்.

தினமலரில் இருந்து சன் குழுமத்தில் சன்நியூஸ் தொலைகாட்சியில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.

இன்னும் ஒரு வங்கி கணக்கா என்று அயர்ச்சி ஏற்பட்டது. நல்ல வேளையாக அவர்கள் ஏற்கனவே என்ன வங்கி கணக்கு இருக்கிறது என்று கேட்டனர். சிட்டி யூனியன் வங்கி கணக்கு இருக்கிறது என்றேன. சரி அந்த எண்ணை மட்டும் கொடுத்து விடுங்கள் என்றேன். நல்ல வேளையாக அந்த வங்கி கணக்கை செயலில் வைத்திருந்ததால் அந்த எண்ணை கொடுத்து விட்டேன்.

அடிக்கடி பணம் எடுத்து கார்டு தேய்ந்து விட்டது. எனவே சிட்டி யூனியன் வங்கியில் இருந்து புதிய கார்டு ஒன்றை வாங்கினேன்.

இந்த தருணத்தில் வீட்டு கடன் ஒன்று வாங்க முயற்சித்து, பாரத ஸ்டேட் வங்கியில் முயற்சித்த போது, அங்கே வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு புதிய ஏடிஎம் கார்டு கிடைத்தது. வீட்டு கடன் கிடைக்கவில்லை என்பது வேறுவிஷயம்.

என் மனைவிக்கு என இந்தியன் வங்கியில் ஒரு கணக்கு தொடங்கினோம். அங்கு அவருக்கு ஒரு ஏடிஎம் கார்டு கொடுத்தார்கள். அதனை நெடுநாளாக உபயோகிக்க வில்லை என்பதால் மீண்டும் புதுப்பிக்க கூறினர். ஆனால் இன்னும் அதனை புதுப்பிக்க முடியாமல் இருக்கிறது.

சன்குழுமத்தில்  என்னோடு ஒரு நண்பர் பணியாற்றினார். அவருடைய ஏடிஎம் கார்டு அவரிடம் இருப்பதில்லை. அவரின் மகனிடம்தான் இருக்குமாம். அவரே சொன்ன தகவல் இது. சம்பளம் போட்டதும் அதில் இருந்து பணத்தை எடுத்து அவர் மனைவியிடம் அவர் மகன்தான் கொடுப்பானாம். கார்டை எப்போதுமே இவர் கையில் வைத்ததில்லை என்றார்.

கணவர் சம்பாதிக்கும் பணம் சரியாக வீடு வந்து சேரவேண்டும் என்ற மனைவியின் அக்கறையாக இதனை கருதினேன்.

பெரும்பாலானோர் அலுவலகத்தில் வாங்கும் சம்பளம் பற்றியோ, எப்போது வரும் என்பது பற்றியோ கூறுவதில்லை. அதன் பலனாக இது போன்ற நிலைவந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

ஏடிஎம் முறை வழக்கத்தில் வந்ததில் இருந்து இன்னொரு முறை வழக்கொழிந்து போய்விட்டது என்றே கருதுகிறேன்.

சம்பளம் வாங்கும் நபர்கள் பலர் ஏடிஎம் கார்டு புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு சம்பள கவரை சுவாமி படத்தின் முன்பு வைத்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். திருமணம் ஆகிவிட்டால் மனைவியிடம் கொடுத்து அதனை சுவாமி படத்தின் முன்பு வைக்க சொல்வதும், இல்லை எனில் அம்மாவிடம் கொடுத்து வைக்கச் சொல்வதும் நடைமுறையாக இருந்திருக்கிறது. இப்போது யாரும் ஏடிஎம் கார்டை அவ்வாறு வைப்பதில்லை. நிறைய பேருக்கு சம்பளம் பற்றி பொய் சொல்வதற்கும் இது வசதியாகி விட்டது என்றே கூறலாம்.

ஏடிஎம் இயந்திரம், காவலாளி பற்றி அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.....

Thursday, April 4, 2013

மலர்ச்சி எங்கே?

அதிகாலை எழுவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் அலுவலகத்தில் இரவுப் பணி போன்ற காரணங்களால் கடந்த 8 வருடங்களாகவே அதிகாலை எழும் பழக்கம் என்னிடம் இருந்து விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுவயதில் அதிகாலையில் எழுந்து அப்பா உடன் ஆற்றில் குளித்த புத்துணர்ச்சி எந்த ஒரு சூழலிலும் இனி வரப்போவதில்லை.


தாய்மாமா வீட்டில் கொஞ்ச காலம் வளர்ந்த போது, அவருக்கு உதவியாக அதிகாலையில் பேப்பர் போடச் சென்ற அனுபவமும் அலாதியானது.

பேப்பர் போடப்போகும்போது பல் துலக்காமல் மார்கழி பனியில் பெருமாள் கோவிலில் பொங்கல் வாங்கி சாப்பிட்ட அனுபவங்கள் ரசனையானவை.

பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது. வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகாலையில் எழுந்து பேருந்தில் தூங்கிக்கொண்டே செல்வது என்பதும் சிறுவயது அனுபவங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.

சென்னை நகர வாழ்க்கையாகிப் போனபிறகு இரவு தூங்குவதற்கே பின்னிரவாகி விடுகிறது. அப்புறம் எங்கே அதிகாலையை ரசிப்பது என்று தெரியவில்லை.

ஒரு நாள் நானும் என் மனைவியும் அதிகாலை கடற்கரைக்கு சென்றோம். சூரியன் உதிக்கும் அந்த காலைப்பொழுதை மிகவும் ரசித்தோம்.

கடற்கரை ஓரமாய் இருக்கும் ஒரு தொலைகாட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிய போது காலை ஷிப்ட்டில் வானுயர்ந்த கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே உதிக்கும் கதிரவனை பார்ப்பது அப்படி ஒரு ஆனந்தமாய் இருக்கும்.

அதிகாலை வேளையில் கடற்கரை நோக்கி செல்லும் ஏதாவது ஒரு சாலையில் நடந்து சென்றால் மெல்ல, மெல்ல சூரியன் எட்டிப்பார்க்கும் காட்சி அற்புதமானதாக இருக்கும்.

அதிகாலை வேளையில் சகமனிதர்களை பார்ப்பதும் அலாதியான அனுபவமாக எனக்கு இருக்கிறது. அதிகாலை வேளையில் எழுந்து இருசக்கர வாகனத்தில் செல்லுகையில் இரண்டு அல்லது மூன்று பயணிகளுடன் கூட்டமில்லாமல் நம்மை கடந்து போகும் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பயணிகளை சுமந்து செல்லும் ஆட்டோக்கள், அசோக்நகரில் நடைபயிற்சிக்காக விதவிதமான ஷூக்களில் விரையும் கால்கள் எல்லாமே உற்றுநோக்கலில் ஒருவகையான ரசனை.

அதிகாலை புத்துணர்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் என்னைப்போன்ற அனுபவங்களை பெற்றிருக்க கூடும். அலுவலகத்தில் அதிகாலையில் சிலரது முகத்தை காணும் போது ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும்.

பெரும்பாலானோர் அதிகாலை வேளையில் கூட முகம் மலராமல் இறுக்கமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

முடிந்து போன நாளின் தாக்கத்தின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக காலையிலும் அதே போல இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்று ஒருவரை பார்த்தேன். அவரது சம்பளமோ அதிகம், எனினும் அவரது களையிழந்த முகம் எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அவருக்கு என்ன கவலை இருக்க முடியும், அழுது வடிந்த முகம், சட்டையில் ஏதோ கறை என அழுது வடிந்து கொண்டிருந்தார்.

மலர்ச்சியான முகத்தை காண்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது.

பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் மனிதர்களில் இறுக்கத்தைத்தான் பார்க்க முடிகிறது. அதிகாலையில் மலரும் பூவைப் போல மலர்ந்த முகங்களை பார்ப்பது அரிதாகி வருகிறது.

குழந்தைகளிடம் இருக்கும் மலர்ச்சி கூட சில நேரங்களில் இல்லாமல் போய்விடுகிறது. அதிகாலையில் அவர்களை எழுப்பி, வியபார கல்வி ஆகிவிட்ட சூழலில் அவர்களை பள்ளி எனும் கொட்டடிக்குள் அடைக்க அனுப்பி வைக்கிறோம். மலர்ச்சி எங்கே போனது என்று தெரியவில்லை. எங்கேயாவது மலர்ச்சி இருந்தால் சொல்லுங்கள்....