Thursday, August 6, 2009

பிளாஷ் நியூஸ்: செல்ராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது

கொழும்பு: இலங்கையில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் கடந்த மே 18ம் தேதி முடிவுக்கு வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போரில் கொல்லப்பட்டனர். புலிகளின் வெளியுறவுத்துறை தலைவர் செல்ராசா பத்மநாதன் உட்பட மேலும் சில புலிகள் தலைவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தனர். இந்நிலையில், பிரபாகரன் விட்டுச் சென்ற போராட்ட பாதையை செல்வராசா பத்மநாதன் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று புலிகளின் செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு அறிக்கை வெளியானது. இந்நிலையில், புலிகளின் புதிய தலைவர் பற்றி இலங்கை அரசு நீண்டநாட்களாக கருத்து எதுவும் சொல்லவில்லை. இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயக கூறுகையில், புதிய தலைவரின் கீழ் புலிகள் மீண்டும் ஒன்றுபடுவதை இலங்கை அரசு அழிக்கும் என்று ஆவேசமாகக் கூறியிருந்தார். இதற்கிடையே அதிரடி திருப்பமாக தாய்லாந்து நாட்டில் பதுங்கியிருந்த செல்வராசா பத்மநாதன் நேற்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு பத்திரிகை உலக வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கடத்திய வழக்கில் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள செல்வராசா பத்மநாதன் மீது இன்டர்போல் போலீசாரின் கைது வாரண்ட் நிலுவையில் இருந்தது என இலங்கை டிவி சேனல்கள் கூறுகின்றன.