Tuesday, July 21, 2009

பிளாஷ் நியூஸ் புலிகளின் புதிய தலைவர்:


ஜூலை 21: புலிகள் தலைவர் பிரபாகரனால்,அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என புலிகள் அறிவித்துள்ளனர்.
புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அதர்ச்சியளிக்கும் வகையில் புலிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் தோற்றுவிட்டது என இலங்கையும், அதன் ஜால்ரா நாடுகளும் நினைத்திருக்கும் மாயையையும் தகர்த்தெறிவோம் என்று கூறியுள்ளனர்.
புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழு சார்பில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்மிகுந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை அரசு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை. எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் இந்த கடமை எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் -விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம்.
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.
எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.
எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப தேசியத் தலைவர் பிரபாகரன், புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமித்த செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப எமது போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார். புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கின்றோம்.
போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில், இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்போம். எமது எதிர்கால செயல்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலைபோன்ற ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைத்தால் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.
எமது தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.
இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment